கற்கும் பாரதம் திட்டப்பணியை, மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.தமிழகத்தில், பெண்கள், 50 சதவீதத்துக்கும் குறைவாக கல்வியறிவு பெற்றுள்ளதாக கருதப்படும், ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை உட்பட, எட்டு மாவட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியில், கற்கும் பாரதம் திட்டம் செயல்பட்டது.இதில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பஞ்., அளவில், கற்கும் பாரதம் மையம் அமைக்கப்பட்டு, ௨,௦௦௦ ரூபாய் சம்பளத்தில், இரண்டு பயிற்சியாளர்கள் செயல்பட்டனர்.எழுத, படிக்க, வாசிக்க தெரியும் அளவுக்கு, அடிப்படை கல்வி, இரண்டாவது கிரேடாக - மூன்றாம் வகுப்புக்கு இணையாகவும், மூன்றாவது கிரேடாக - ஐந்தாம் வகுப்புக்கு இணையாகவும், கற்பித்து, தேர்வுக்குப்பின், சான்று வழங்கப்படும். மார்ச், 31ம் தேதியுடன், இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறையினர் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில், இரண்டரை லட்சம் பேருக்கு கற்பிக்கப்பட்டு, 5,000 பேர் தவிர மற்றவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். 'முற்றிலும் கல்வியறிவு பெறாதவர்கள், எஸ்.சி., - எஸ்.டி., - மலைப்பகுதி பெண்கள் அதிகம் பயன்பெற்றனர்.தற்போது திட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மையங்கள் மூடப்பட்டுள்ளன' என்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:இத்திட்டம் ரத்து செய்யப்படவில்லை.தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். விரைவில் வேறு வடிவில், கூடுதல் பயனுடன் வருமென்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.