பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும்போது, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளும் வகையில், ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது.வரும் 23, 30 ஆகிய தேதிகளில் முறையே, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவில், மாணவர்களின் கல்வித்தகுதி, அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்யப்படுகிறது.அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் போது  இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.ஏற்கனவே பொதுத்தேர்வு எழுதிய, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு, முந்தைய பதிவு எண் அடங்கிய ஒப்புகைசீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் ரசீதை, அந்தந்த பள்ளிகளிலும் பராமரிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதோடு, ஜாதி சான்றிதழ் மற்றும் குடும்ப அடையாள அட்டைஆகியவை இருந்தால், இப்பதிவில் கூடுதலாக சேர்க்கலாம்.10ம் வகுப்புக்கு, வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி புதிதாக பதிவதால், இம்மாணவர்களிடம் முக்கிய சான்றிதழ்களின் நகல்கள் பெறப்பட்டு தகவல்கள் பதிவேற்றுமாறு தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த. ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், ‘வேலைவாய்ப்பு பதிவு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பழைய கம்ப்யூட்டர்களாக இருப்பின் பழுது நீக்குவதோடுமாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களின் தகவல்கள் சரிபார்த்தல், பிழையின்றி உள்ளீடு செய்தல் உள்ளிட்ட பணிகளில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.