தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள, அண்ணா பல்கலை மண்டல வளாகங்களில், தலா, நான்கு இளநிலை பொறியியல் பாடப்பிரிவுகளை துவக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில், தர வரிசையில், நான்காவது இடத்தில் உள்ள அண்ணா பல்கலையின், சென்னையில் நான்கு வளாகங்களிலும், பிற மாவட்டங்களில் உள்ள, 13 உறுப்புக் கல்லுாரிகளிலும், பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலைபட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

திருநெல்வேலி, மதுரை, கோவை மண்டல வளாகங்களில், பொறியியல் முதுநிலை பட்டப் படிப்பு மட்டும் நடத்தப்படுகிறது. அந்த மண்டலங்களிலும், 'இளநிலை பட்டப் படிப்புகளை துவக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, மூன்று மண்டல வளாகங்களிலும், பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு, நடப்பாண்டுமுதல், நான்கு இளநிலை படிப்புகளை துவக்கவும், ஒவ்வொருபாடப்பிரிவிலும், 60 மாணவர்களை சேர்க்கவும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், இந்த ஆண்டு ஒவ்வொரு மண்டலத்திலும், தலா, 240 சேர்க்கை இடங்கள் வீதம், மொத்தம், 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இதனால், அதிக மதிப்பெண்கள் பெற்ற, ஏழை மாணவர்கள், குறைந்த கட்டணத்தில், தரமான தொழிற்கல்வியை பெறுவர்.