புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில்170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தைமாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம்அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. இதுகுறித்து கோபி அருகே உள்ள கொடிவேரியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய  பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.  அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதுபற்றி  விசாரித்தபோது, அங்குள்ள மாணவர்கள் தெலுங்கு மொழி அதிகம் பேசுவதால்தான்  என்பதும், நமது ஆசிரியர்களுக்கு தெலுங்கு மொழி குறித்த பயிற்சி இல்லை  என்பதும் தெரியவந்தது. தெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கலந்து கொண்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். 1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு நான்கு வகையான சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்

பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா200 மதிப்பெண்கள் என 1200  மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது.இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன்  முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும். ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200  மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி  ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறைதிட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பிளஸ்2க்கு  மட்டும் தனியாக மதிப்பெண்சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று  தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.